புதுவை பிரபல ரவுடி சரமாரி வெட்டிக்கொலை
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை காளியம்மன் கோவில் தோப்பு எல்லையம்மன் கோவில் வீதி 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சாணி குமார். (வயது 45). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாணி குமார் சமீபத்தில் தண்டனை முடிந்தும் தனக்கு ஆபத்து ஏற்படலாம் என கருதி வீட்டுக்கு வராமல் வெளியூரில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் அருகில் உள்ள எல்லை காளியம்மன் கோவில் திருவிழா நடை பெற்றது.
இந்த விழாவில் பங்கேற்க நேற்று இரவு சாணிகுமார் தனது கூட்டாளிகளுடன் வந்திருந்தார். அப்போது முகமூடி அணிந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது.
அவர்கள் சாணி குமாரை நோக்கி நாட்டு வெடி குண்டுகளை வீசினர். ஆனால், அந்த கும்பல் வீசிய வெடிகுண்டுகள் குறி தவறி கோவில் சுவற்றில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதனால் விழாவுக்கு வந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவுடி சாணிகுமார் மற்றும் அவரது கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மேலும் வெடி குண்டு வீசிய மர்ம கும்பலும் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
இந்த நிலையில் கோவில் விழா முடிந்ததும் நள்ளிரவு சாணி குமார் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 6-க்கும் மேற்பட்ட கும்பல் அவரை எதிர் நோக்கி காத்திருந்தது.
இதையடுத்து தன்னை தீர்த்துக்கட்ட கும்பல் வந்துள்ளதை அறிந்த சாணி குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.
ஆனால், அந்த கும்பல் ஓட, ஓட விரட்டி சாணி குமாரை சரமாரியாக வெட்டியது. இதனை அவர் தடுக்க முயன்ற போது, அவருக்கு இடது கையில் வெட்டு விழுந்தது.
இதனால் சாணி குமார் சரிந்து விழுந்தார். உடனே அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில், சாணி குமாரின் தலை சிதறியது. இதில், ரத்த வெள்ளத்தில் சாணி குமார் இறந்து போனார்.
சாணி குமார் இறந்ததை உறுதி செய்த பின்னரே அந்த கும்பல் கத்தி, அரிவாள்களை அங்கேயே வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டது. நள்ளிரவில் இந்த கொலை நடந்ததால் அந்த பகுதியை சேர்ந்த யாருக்கும் தெரியவில்லை.
இன்று காலைதான் சாணி குமார் வெட்டி கொலை செய்யப்பட்டதை அந்த பகுதி மக்கள் கண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் வீரபத்திரசாமி, தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் சாணி குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து ரவுடி சாணி குமாரை வெட்டி கொன்ற கும்பலை தேடி வருகிறார்கள்.
பிரபல ரவுடி சாணி குமார் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக வாணரப்பேட்டையில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.