சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்- 2 கல்லூரி மாணவர்கள் பலி
வல்லம்:
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியை சேர்ந்தவர் சையது. இவரது மகன் அப்சல் (வயது 18).
அதே ஊரை சேர்ந்த லாரன்ஸ் மகன் ஆரோக்ய ஜோயல் (18), திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமாநேரியை சேர்ந்த முகமது உசேன் மகன் சபீக் அப்துல் ரகுமான். இவர்கள் 3 பேரும் வல்லத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் மாணவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வல்லத்தில் இருந்து செங்கிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சபீக் அப்துல் ரகுமான் ஓட்டினார்.
அவர்கள் தஞ்சை- திருச்சி சாலையில் உள்ள திருமலைசமுத்திரம் அருகே சென்ற போது எதிரே மயிலாடுதுறையில் இருந்து திருச்சி நோக்கி வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆரோக்ய ஜோயல், அப்சல் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் படுகாயமடைந்த சபீக் அப்துல் ரகுமானை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக தஞ்சை-திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.