செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Published On 2019-08-28 05:27 GMT   |   Update On 2019-08-28 05:27 GMT
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்:

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த சில நாட்களாக 11 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதற்கிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்த மழையால் 2 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று காலை முதல் 2 அணைகளில் இருந்தும் 13 ஆயிரத்து 733 கன அடி தண்ணீர் காவிரியில திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 10 ஆயிரத்து 10 கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று தண்ணீர் வரத்து 9 ஆயிரத்து 500 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து 9 ஆயிரத்து 800 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 117.22 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 117.16 அடியாக இருந்தது.

Tags:    

Similar News