செய்திகள்
சீருடை பணியாளர் தேர்வு எழுதிய திருநங்கை கவி

மக்களுக்கு நல்லது செய்யவே போலீஸ் தேர்வு எழுதினேன் - திருநங்கை கவி

Published On 2019-08-26 05:26 GMT   |   Update On 2019-08-26 05:26 GMT
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற முழு முயற்சியுடன் படித்து போலீஸ் தேர்வு எழுதி உள்ளதாக திருநங்கை கவி கூறி உள்ளார்.
திருப்பூர்:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், 2-ம் நிலை சிறைகாவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.

இதற்காக திருப்பூரில் ஜெய்வாபாய் பள்ளி மற்றும் குமரன் மகளிர் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து 3 ஆயிரத்து 306 ஆண்கள், 476 பெண்கள் என மொத்தம் 3,782 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், விண்ணப்பித்திருந்தவர்களில் 3,058 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 724 பேர் தேர்வு எழுத வரவில்லை.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராஜபாண்டி என்ற வாலிபர் திருநங்கையாக மாறி கவி(வயது 27) என்ற பெயரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருப்பூருக்கு வந்தார். தற்போது திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் தங்கி இருக்கிறார். இவரும் போலீஸ் தேர்வை எழுதினார். இவருக்கு குமரன் மகளிர் கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்வர்கள் போலவே காலையில் குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரி வளாகத்திற்கு கவி வந்தார். அவருடைய ஆவணங்களை போலீசார் சோதனை செய்தபோது, ஆதார் கார்டில் கவி என்றும் ஹால் டிக்கெட்டில் பழைய பெயரான ராஜபாண்டி என்றும் இருந்தது. இதனால் போலீசார், பெயர் மாற்றத்திற்கான ஆவணத்தை காண்பிக்கும்படி அறிவுறுத்தினார்கள். இதையடுத்து பெயர் மாற்றத்திற்கான ஆவணத்தை அவர் எடுத்து வந்து போலீசாரிடம் காண்பித்தார். இதன்பின்னர் அவரை போலீசார் தேர்வு எழுத அனுமதித்தனர்.



போலீஸ் தேர்வு எழுதிய திருநங்கை கவி கூறியதாவது:-

சிறுவயதில் இருந்தே போலீஸ் துறையில் பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆசை. எனது நண்பர்களும், என்னுடன் இருக்கும் திருநங்கைகளும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். என்னை போன்ற திருநங்கை ஒருவர் ஏற்கனவே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அதையே முன்மாதிரியாக எடுத்து கொண்டு போலீஸ் துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற முழு முயற்சியுடன் படித்து தேர்வு எழுதியுள்ளேன். எங்களை இழிவாக பார்க்கும் சமூகத்தின் பார்வையில் நான் நல்ல நிலையில் வரவேண்டும். இதில் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News