செய்திகள்
மணமக்கள் வசந்தன்- மெகுமி ஆகியோருடன் ஜப்பான் நாட்டை சேர்ந்த மணமகளின் உறவினர்கள்.

இந்து முறைப்படி ஜப்பான் நாட்டு காதலியுடன் கும்பகோணம் விஞ்ஞானி திருமணம்

Published On 2019-08-25 12:48 GMT   |   Update On 2019-08-25 12:48 GMT
கும்பகோணம் விஞ்ஞானி ஜப்பான் நாட்டு பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களை உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.

கும்பகோணம்:

கும்பகோணம் விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் வசந்தன் (வயது32). இவர் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர் கடந்த 5 வருடங்களாக ஜப்பானில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

ஜப்பான் நாட்டின் டோக்கியோவை சேர்ந்தவர் மெகுமி(28). இவரும் அதே ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

பின்னர் பாரம்பரிய இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருவரும் மெகுமியின் உறவினர்கள், நண்பர்களுடன் நேற்று கும்பகோணம் வந்தனர். இதையடுத்து இன்று காலை கும்பகோணம் பச்சையப்பன் தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி வசந்தன் தனது காதலி மெகுமியின் கழுத்தில் தாலி கட்டினார்.

திருமணத்தின் போது ஜப்பான் நாட்டு பெண்ணாகிய மெகுமி பட்டுப்புடவை கட்டி மணமேடையில் அமர்ந்திருந்தார். இந்த திருமண விழாவில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு மண மக்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.

பின்னர் மணமகள் மெகுமி கூறும் போது,‘‘ ஜப்பான் நாட்டு பெண் என்றாலும் இந்தியாவின் கலாச்சாரம் குறிப்பாக தமிழர்களின் இந்து கலாச்சாரம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. நான் காதலித்த வசந்தனை அவர்களது மத முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்து இங்கு வந்து திருமணம் செய்து கொண்டேன். இந்த நிகழ்ச்சி எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாகும். நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தமிழர்களின் பாரம்பரியத்தை இனி நானும் கடைபிடிப்பேன்’’ என்றார்.

Tags:    

Similar News