விஜயகாந்த் பிறந்த நாள் விழா: ஜி.கே.வாசன் நேரில் வாழ்த்து
சென்னை:
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் 68-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாலி கிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் காலை 10.30 மணி அளவில் விஜயகாந்த், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் அகிலாவின் மகள் தேவி-ராஜ்குமார் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தார்.
இதில் பிரேமலதா விஜயகாந்த், அவைத்தலைவர் இளங்கோவன், துணை செயலாளர்கள் எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி மாவட்ட செயலாளர் போரூர் தினகரன், பகுதி செயலாளர் சதிஷ்காந்த் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதுபற்றி புதுமண தம்பதி கூறும்போது, ‘நீண்ட நாட்களாக காத்திருந்து இன்று விஜயகாந்த் தலைமையில் திருமணம் நடைபெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் இன்னும் நூறாண்டு காலம் வாழ வேண்டும்’ என்றனர்.
இதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு கட்சி தொண்டர்கள் பூங்கொத்து மற்றும் சால்வை கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு விஜயகாந்த் இனிப்புகள் வழங்கினார். இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தே.மு.தி.க. அலுவலகத்துக்கு வந்து விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.