கும்பகோணம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள்- பணம் கொள்ளை
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே சோழபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாலிக்புரோச். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது குடும்பத்தினரும் அவருடனே தங்கி உள்ளனர். இதனால் இவரது வீட்டை மாலிக் புரோச்சின் அண்ணன் ஜூபைர் என்பவர் பராமரித்து வருவதோடு, இரவில் வீட்டின் மாடியில் தங்கி பாதுகாத்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு மாலிக் புரோச்சின் வீட்டுக்கு வந்த ஜூபைர் மாடிக்கு சென்று படித்து விட்டாராம். அப்போது நள்ளிரவில் வீட்டின் கீழ் பகுதியில் இருந்து சத்தம் வந்துள்ளது. இதனால் திடுக்கிட்டு விழித்த ஜூபைர் உடனடியாக கீழே இறங்கி வந்து பார்த்தபோது பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. மேலும் பீரோவில் இருந்த 1 லேப்-டாப், 1 செல்போன், 5 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஜூபைர் இதுபற்றி திருவிடைமருதூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.