செய்திகள்
பாலியல் தொல்லை

கருங்கல் அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: 3 பேரிடம் போலீசார் விசாரணை

Published On 2019-08-23 12:37 GMT   |   Update On 2019-08-23 12:37 GMT
கருங்கல் அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐ.டி.ஐ. மாணவர்கள் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குளச்சல்:

கருங்கல் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வருகிறார்.

அந்த மாணவி பள்ளிக்குச் செல்லும் போதும், வீடு திரும்பும் போது முள்ளங்கினாவிளை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அந்த மாணவியை தான் காதலிப்பதாகவும், திருமண செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசை வார்த்தை கூறி அவரிடம் பழகி உள்ளார்.

அந்த தொழிலாளியின் நண்பர்களான 2 ஐ.டி.ஐ மாணவர்களும் அந்த மாணவியுடன் நட்புடன் பழகி உள்ளனர்.

இந்த நிலையில் அந்த மாணவி வீட்டில் இருந்த போது 2 ஐ.டி.ஐ.மாணவர்களும் அங்குச் சென்று அவரிடம் பேசி உள்ளனர். அப்போது அந்த மாணவியை வீட்டில் இருந்து வெளியே வரும்படி கூறி அழைத்த அந்த மாணவர்கள் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

அதே போல கூலித் தொழிலாளியும், பிளஸ்-2 மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் திப்பிர மலைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

இது பற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி மற்றும் 2 ஐ.டி.ஐ. மாணவர்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.

அவர்களை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News