செய்திகள்
உடல் ஒப்படைப்பு (கோப்பு படம்)

வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் இறந்த கருங்கல் முன்னாள் பெண் கவுன்சிலர் உடல் ஒப்படைப்பு

Published On 2019-08-19 06:24 GMT   |   Update On 2019-08-19 06:24 GMT
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நீதிபதி முன்பு பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட கருங்கல் முன்னாள் பெண் கவுன்சிலர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாகர்கோவில்:

நாகர்கோவில் வழுக்கம் பாறையைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கிறிஸ்டோபர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் மீது சிறுமி ஒருவரிடம் சில்மி‌ஷம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் கிறிஸ்டோபர் மீது போக்சோ சட்டப்படி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்ததும் கிறிஸ்டோபர் தலைமறைவாகி விட்டார். அவரது செல்போனை போலீசார் கண்காணித்த போது கிறிஸ்டோபர் குமரி மேற்கு மாவட்டம் கருங்கல்லை அடுத்த கப்பியறையில் உள்ள ஒரு பெண்ணுடன் அடிக்கடி பேசியது தெரிய வந்தது.

வள்ளியூர் போலீசார், கப்பியறை வந்து கிறிஸ்டோபருடன் தொடர்பில் இருந்த பெண்ணை தேடினர். இதில் அவர் லீலாபாய்(வயது45) என்பதும், கப்பியறை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் என்றும் தெரிய வந்தது. லீலாபாய் வீட்டிற்கு போலீசார் சென்ற போது அங்கு கிறிஸ்டோபர் இல்லை. எனவே வள்ளியூர் போலீசார் லீலாபாயை விசாரணைக்காக வள்ளியூர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

போலீஸ் நிலையம் சென்ற லீலாபாய் நேற்று அதிகாலை திடீரென இறந்து போனார். வயிற்று வலி காரணமாக லீலாபாய் ரத்த வாந்தி எடுத்ததாகவும், அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். பின்னர் லீலாபாயை ஊருக்கு அழைத்து வந்த போது அவர் இறந்து விட்டதாகவும், போலீசார் கூறினர்.

போலீசார் பிடித்துச் சென்ற லீலாபாய் திடீரென இறந்தது அவரது உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லீலாபாய் மர்மமாக இறந்தது குறித்து விசாரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே லீலாபாய் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டது.

போலீசார் அழைத்துச் சென்ற போது லீலாபாய் இறந்ததால், அவரது உடல் பிரேத பரிசோதனை நீதிபதி முன்பு நடத்தப்பட வேண்டும். எனவே போலீசார் இந்த தகவலை வள்ளியூர் குற்றவியல் கோர்ட்டுக்கு தெரிவித்தனர். அங்கிருந்து குற்றவியல் கோர்ட்டு நீதிபதி அலிமா நாகர்கோவில் வந்தார். நேற்று மாலை 4.40 மணிக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவரது முன்னிலையில் டாக்டர்கள், லீலாபாய் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்ததும் லீலாபாய் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை ஓரிருநாளில் தயாராகும்.

இந்த அறிக்கை வள்ளியூர் குற்றவியல் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு தான் லீலாபாயின் மர்ம சாவு குறித்த முழு விபரங்கள் தெரிய வரும்.
Tags:    

Similar News