செய்திகள்
டீ, காபி விலை உயர்வு

பால் விலை அதிகரிப்பு - மதுரையில் டீ, காபி விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்வு

Published On 2019-08-19 03:34 GMT   |   Update On 2019-08-19 03:34 GMT
ஆவின் பால் லிட்டருக்கு ரூ.6 அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மதுரையில் இன்று முதல் டீ-காபி விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்படுகிறது. இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
மதுரை:

நமது வாழ்வின் அன்றாட தேவைகளில் மிக முக்கியமானது பால். குழந்தைகளுக்கு பால் தான் முக்கிய உணவு. அதே போல் பால் சேர்த்து டீ-காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் இல்லை. ஒருவேளைக்கு 2 முறையாவது ஒவ்வொரு வீட்டிலும் டீ-காபி போட்டு குடித்து விடுவார்கள். உழைக்கும் வர்த்தகத்தினரை பொறுத்தவரை உணவு இல்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு நாளைக்கு குறைந்தது 2 முறையாவது டீ-காபியை கடையில் குடித்து விடுவார்கள். அதனால் தான் பால் 1 லிட்டருக்கு ரூ.6 விலை அதிகரிப்பு என்பது அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்படைய செய்து உள்ளது.

இந்த பால் விலை உயர்வை தொடர்ந்து மதுரையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் டீ-காபி விலை இன்று முதல் ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்படுகிறது. தற்போது மதுரை நகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் ஒரு கப் டீ, காபி ரூ.12-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று முதல் இதன் விலை ரூ.14 ஆக உயர்த்தப்பட இருக்கிறது. கிராமப்புற பகுதிகளை பொறுத்தவரையில் ரூ.5, ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீ, காபி முறையே ரூ.7, ரூ.9 என அதிகரிக்கப்பட இருக்கிறது. அதேபோல், பார்சல் டீ, காபி விலையும் அதிகரித்துள்ளது. ஓட்டல்களில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீ, காபியின் விலை ரூ.22 முதல் ரூ.28 வரை அதிகரிக்கப்பட இருக்கிறது.

காபி-டீ வர்த்தக சங்க கவுரவ செயலாளர் சுகுமாறன் கூறியதாவது:-

மதுரை மாநகரில் மட்டும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காபி-டீ கடைகள் உள்ளன. ஏற்கனவே தனியார் பால் விலை அதிகரித்து விட்டது. தற்போது ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்திவிட்டனர். இந்த உயர்வால் நாங்களும் விலையேற்றம் செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். உதாரணமாக ஒரு கடையில் 100 லிட்டர் பால் வாங்கினால், லிட்டருக்கு ரூ.6 அதிகம் என்ற அடிப்படையில் கூடுதலாக ரூ.600 செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய சுமை. எனவே நாளை (அதாவது இன்று) முதல் ஒவ்வொரு கப் காபி-டீ விலை குறைந்தது 2 ரூபாய் வரை அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை மாவட்ட ஓட்டல்கள் சங்க தலைவர் டெம்பிள்சிட்டி குமார் கூறும் போது, மதுரையில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் ஆவின் பால் தான் பயன்படுத்துகிறோம். 1 லிட்டருக்கு ரூ.6 அதிகரித்து உள்ளனர். இந்த விலையேற்றத்தை சமாளிக்க நாங்களும் விலை ஏற்றம் செய்ய வேண்டிய நிலை தான் உள்ளது. ஓட்டல்களில் தற்போது உள்ள விலையை விட கூடுதலாக ரூ.2 முதல் ரூ.5 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

Tags:    

Similar News