குடிநீர் குழாயுக்காக பள்ளம் தோண்டியபோது சுவர் இடிந்து குழந்தை பலி
பூந்தமல்லி:
குன்றத்தூர் போரூர் சாலையில் கடந்த ஒரு மாதமாக சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஜே.சி.பி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.
இரவு பகலாக இந்த பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை அங்குள்ள தனியார் திரையரங்கம் எதிரே பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. குழாய் பதித்த பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அதை மூடினர். அப்போது அருகில் தற்காலிகமாக குடிசை போட்டு வாழ்ந்து வந்த நரிக்குறவர் மோகன் வீட்டு சுவரில் பட்டு சுவர் இடிந்தது.
சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த அவரது மகள் மாசாணி (வயது 5 ) தலை, கை, கால்களில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தாள்.
படுகாயம் அடைந்த அவனை உடனடியாக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவளை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.