ஆரணி அருகே குடிநீர் கேட்டு கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல்
ஆரணி:
ஆரணி அருகே உள்ள அன்மருதை பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 1 மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை. இது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஆரணி-வந்தவாசி செல்லும் சாலையில் கொட்டும் மழையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த பேரணமல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எங்கள் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கபடவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் செய்யாற்று படுகையில் நடக்கும் மணல் கொள்ளையே காரணம்.
இரவு, பகல் என 24 மணி நேரமும் ஆற்றுபடுகையில் மணல் திருட்டு நடந்து வருகிறது. இதனால் நீர் மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவே மணல் கொள்ளையை தடுத்து உடனடியாக எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.
உரிய நடவடிக்கை எடுத்து உங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.