செய்திகள்
விபத்து

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து- குற்றாலம் சென்ற 2 பேர் பலி

Published On 2019-08-17 06:01 GMT   |   Update On 2019-08-17 06:01 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். விபத்து குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

மதுரை ஒத்தக்கடை யானை மலை பகுதியைச் சேர்ந்தவர் ஆசிக் அலி (வயது 42). இந்திரா நகரைச் சேர்ந்தவர் முகமது பிலால் (38). இவர்கள் செல்லப்பாண்டி மகன் செல்வநாயகம் (26) உள்பட சிலருடன் காரில் குற்றாலம் புறப்பட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நந்தம்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட அழகாபுரி போலீஸ் சோதனை சாவடி அருகே நள்ளிரவில் கார் சென்றது. அப்போது எதிரே குற்றாலத்தில் இருந்து ஒரு கார் வந்தது. 2 கார்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ஆசிக் அலி, சம்பவ இடத்திலேயே பலியானார். முகமது பிலால், செல்வநாயகம், அரவக்குறிச்சி காளிதாஸ் (30), கும்பகோணம் பால சுப்பிரமணி, அவரது மனைவி செல்வராணி (46), ராஜ்குமார் (22), ரஞ்சித்குமார் (8), ஸ்ரீநிதி (7) ஆகியோர் காயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது பிலால் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News