செய்திகள்
வழக்கு

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு- வாலிபர் மீது வழக்கு

Published On 2019-08-13 12:12 GMT   |   Update On 2019-08-13 12:12 GMT
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கற்பழித்ததாக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை:

மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சாய்லட்சுமி. ஒத்தக்கடை போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில ஆண்டுகளாக நானும், ராஜாக்கூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரும் காதலித்து வந்தோம். அவர் திடீரென்று வேலைக்காக சென்னைக்கு சென்றுவிட்டார். மேலும் அவரது பேச்சை கேட்டு நானும் வீட்டை விட்டு சென்னைக்கு சென்றேன். அங்கு நான் கொண்டு வந்திருந்த 8 பவுன் நகை, ரூ.17 லட்சத்தை செந்தில்குமார் பெற்றுக் கொண்டார்.

மேலும் திருமணம் செய்வதாக கூறி செந்தில்குமார் நெருக்கமாக பழகினார். பின்னர் ஊருக்கு செல், உனது வீட்டிற்கு பெண் கேட்டு வருகிறேன் என்று என்னை மதுரைக்கு அனுப்பி வைத்தார்.

தற்போது செந்தில்குமார் திருமணத்துக்கு மறுத்து வருகிறார். இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக உள்ளனர். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து நகை, பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி செந்தில்குமார், உறவினர்கள் பூமிநாதன், ஆறுமுகத்தம்மாள், அகிலாண்டேஸ்வரி, சக்தீஷ்குமார், சுரேஷ் கல்லாணை ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Tags:    

Similar News