செய்திகள்
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி

பா.ஜனதாவை வீழ்த்தும் சக்தியாக சோனியாகாந்தி திகழ்வார்- நாராயணசாமி பேட்டி

Published On 2019-08-12 10:53 GMT   |   Update On 2019-08-12 10:53 GMT
சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதாவை வீழ்த்தும் சக்தியாக சோனியாகாந்தி திகழ்வார் என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி:

திருவண்ணாமலையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி பதவியேற்றுள்ளார். இவர் தலைமையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சி பெறும். மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் சக்திமிக்க தலைமை சோனியாவுக்கு மட்டுமே உள்ளது. மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தொழிற்சாலைகள் மூடல், எதிர்கட்சி தலைவர்களை மிரட்டுவது, வருமான வரித்துறை மூலம் தொல்லை கொடுப்பது ஆகியவை நடக்கிறது. இதை தட்டிக்கேட்கும் தலைமை சோனியாவுக்கு உண்டு.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அங்குள்ள மக்களுக்கே தெரியாமல் மாநில அந்தஸ்தை நீக்கி யூனியன் பிரதேசமாக பா.ஜனதா அரசு அறிவித்துள்ளது. நாட்டை ஒருங்கிணைத்தால்தான் காப்பாற்ற முடியும், பாதுகாப்பை ஏற்படுத்த முடியும். இந்த நோக்கத்தில் தான் சோனியாகாந்தி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதாவை வீழ்த்தும் சக்தியாக சோனியாகாந்தி திகழ்வார். தமிழகத்தை போலவே ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக புதுவையில் எதிர்கட்சிகள் கூட்டம் நடத்தப்படும். நடிகர் ரஜினிகாந்த் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பேசியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து.

புதுவை பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கேட்டு மத்திய உள்துறை, நிதித் துறைக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு சில தினங்களில் ஒப்புதல் வழங்கப்படும். இதையடுத்து கவர்னர் உரையுடன் சட்டமன்றம் தொடங்கும். அதில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News