செய்திகள்
நர்சு மர்ம மரணம்

காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த நர்சு மர்ம மரணம்

Published On 2019-08-11 13:32 GMT   |   Update On 2019-08-11 13:32 GMT
திருச்சி பொன்மலை அருகே திருமணமான 30 நாட்களில் காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த நர்சு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி:

திருச்சி பொன்மலை அருகே உள்ள மேலகல்கண்டார்கோட்டை கணேஷ் நகரில் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில், தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்த அஜிதா (வயது 27) என்பவர் தங்கியிருந்தார்.

வழக்கமாக காலையில் பணிக்கு செல்லும் இவர் இரவுதான் வீடு திரும்புவார். நேற்று நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியும் திறக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் பொன்மலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது நர்சு அஜிதா வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகிலேயே மாத்திரைகள், வி‌ஷ மருந்து பாட்டில் கிடந்தது. மேலும் வீட்டின் மின்விசிறியில் தூக்கு போடுவதற்காக போடப்பட்டிருந்த நிலையில் சேலை ஒன்றும் தொங்கிக் கொண்டிருந்தது.

குழப்பம் அடைந்த போலீசார் அஜிதாவின் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அஜிதா மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முடிவு செய்து, பிறகு மனம் மாறி மாத்திரைகள் சாப்பிட்டிருக்கலாம் என்றும், பின்னர் வி‌ஷத்தையும் குடித்து இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

நர்சு அஜிதா ஏன் இப்படி ஒரு சாவு முடிவை எடுத்தார்? என போலீசார் விசாரித்த போது சோகமான அதன் பின்னணி கதை வெளியே வந்தது. அஜிதாவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்குளம் அருகில் உள்ள கருங்கல் என்ற குக்கிராமம் ஆகும். நர்சிங் படிப்பு முடித்த அஜிதா சென்னை கேளம்பாக்கத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.

அதே ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த ஊழியர் ஜான்பிரின்ஸ் (27), அஜிதாவின் அழகில் மயங்கி காதலிக்க தொடங்கினான். அஜிதாவும் ஜான்பிரின்சை தீவிரமாக காதலித்தார். அவர்களின் காதலை அறிந்து எதிர்ப்பு தெரிவித்த அஜிதாவின் பெற்றோர் மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.

அதன்படி குமரி மாவட்டம் கல்லுவிளை கிராமத்தை சேர்ந்த ஜெகன்பாபு (31) என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 8-ந்தேதி பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். சிங்கப்பூரில் வேலை பார்த்த ஜெகன்பாபு திருமணத்திற்காக ஊருக்கு வந்திருந்தார். திருமணம் முடிந்து கல்லுவிளையில் புது மனைவி அஜிதாவுடன் தங்கியிருந்தார்.

அஜிதா விடுமுறை முடிந்து மீண்டும் சென்னைக்கு வேலைக்கு சென்றார். ஆஸ்பத்திரியில் தனது முன்னாள் காதலனை பார்த்த அஜிதா, தனக்கு கணவர் ஜெகன்பாபுவுடன் சேர்ந்து வாழப்பிடிக்க வில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஜெகன்பாபுவை தீர்த்து கட்டவும் முடிவு செய்தனர்.

2016 ஜூலை 7-ந்தேதி கணவர் ஜெகன்பாபுவை சென்னையில் நண்பர்கள் திருமண பார்ட்டி வைக்கிறார்கள் என கூறி அஜிதா வரவழைத்தார். உடனே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜெகன்பாபு ஊரில் இருந்து புறப்பட்டு வந்தார். அப்போது அதே ரெயிலில் வந்த அஜிதாவின் காதலன் ஜான்பிரின்ஸ், தன்னை அஜிதா வேலைபார்க்கும் ஆஸ்பத்திரி டாக்டர் என அறி முகப்படுத்திக் கொண்டார்.

ரெயில் திருச்சி வந்ததும் சென்னைக்கு காரில் செல்லலாம் என கூறி ஜெகன் பாபுவை திருச்சி முடுக்குபட்டி ரெயில் தண்டவாளம் அருகில் ஈரத்துணியால் ஜெகன் பாபுவின் கழுத்தை இறுக்கி கொலை செய்து உடலை தண்டவாளத்தில் படுக்க வைத்துவிட்டு தப்பிவிட்டார். ரெயில் ஏறினால் ஜெகன்பாபு தற்கொலை செய்தது போல ஆகிவிடும் என நினைத்து அப்படி செய்துள்ளார்.

ஆனால் திருச்சி ஜங்சன் அருகில் என்பதால் ரெயில்கள் இந்த பகுதியில் மெதுவாக செல்லும். அப்போது அந்த நேரத்தில் வந்த அனந்தபுரி ரெயில் டிரைவர் தண்டவாளத்தில் உடல் கிடந்ததை பார்த்து திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தெரிவிக்க, குட்டு அம்பலமாகி அஜிதாவும், காதலன் ஜான்பிரின்சும் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் ஜாமீனில் விடுதலையாகினர். இந்த வழக்கு திருச்சி கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் ஆஜராக வேண்டும் என்பதால் அஜிதா திருச்சி மேலகல்கொண்டார் கோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.

கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகிக் கொண்டே திருச்சி மாம்பழச் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் கொலை நடந்த 3 வருடம் கழித்து அஜிதா மர்மமான முறையில் திருச்சி வீட்டிற்குள் பிணமாக கிடந்துள்ளார்.

அவர் தற்கொலை முடிவில் இறந்தாரா? அல்லது சாவிற்கு வேறு காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 30 நாட்களில் கணவரை கொலை செய்ய காதலனுடன் உடந்தையாக இருந்த அஜிதா, சம்பவம் நடந்து 3 வருடம் முடிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News