செய்திகள்
தற்கொலை

மேட்டுப்பாளையத்தில் கடன் தொல்லையில் காண்டிராக்டர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2019-07-25 10:32 GMT   |   Update On 2019-07-25 10:32 GMT
மேட்டுப்பாளையத்தில் கடன் தொல்லையால் காண்டிராக்டர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

மேட்டுப்பாளையத்தை அடுத்த தர்மாபுரி சவரிநகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 46).

இவர் கட்டிடங்கள் கட்டுவதற்கான சென்டரிங் காண்டிராக்டராக தொழில் செய்து வந்தார். இவருக்கு கங்கா கவுரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

இதற்கிடையே ராமகிருஷ்ணன் கட்டிட தொழிலுக்கு பலரிடம் பணம் கடன் வாங்கினார். ஆனால், இந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் ராமகிருஷ்ணன் திண்டாடினார். பணம் கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு ராமகிருஷ்ணனுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் மனமுடைந்த ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று காலை கட்டிடத்துக்கு கம்பி கட்டும் பணியை பார்வையிட செல்வதாக மனைவி கங்கா கவுரியிடம் ராமகிருஷ்ணன் கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார்.

ஆனால், மாற்று வழியாக வீட்டின் மாடிக்கு சென்ற ராமகிருஷ்ணன் அங்கு வயரால் தூக்குபோட்டு தொங்கினார்.

சிறிது நேரம் கழித்து கங்காகவுரி துணி உலர வைக்க மாடிக்கு வந்தார். அப்போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கணவரை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராமகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News