செய்திகள்
திமுக கருணாகரன் கொலை

தூத்துக்குடியில் காரை வழிமறித்து திமுக பிரமுகர் கொலை

Published On 2019-07-23 07:42 GMT   |   Update On 2019-07-23 07:42 GMT
தூத்துக்குடியில் காரை வழிமறித்து திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசல் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 64). இவர் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தூத்துக்குடி யூனியன் தலைவராகவும் இருந்தார்.

கருணாகரன் நேற்று மாலை குலையன்கரிசலில் இருந்து திரவியபுரம் செல்லும் ரோட்டில் உள்ள தனது தோட்டத்துக்கு தனியாக காரில் சென்றார். அவர் தோட்டத்தை பார்வையிட்டு மீண்டும் காரில் வீட்டுக்கு திரும்பினார். மாலை 5.45 மணிக்கு அந்த பகுதியில் உள்ள சுடலை மாடசாமி கோவில் அருகே காரில் வந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் ஒரு கும்பல் வந்தது.

அவர்கள் திடீரென கருணாகரனின் காரை வழிமறித்தனர். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கருணாகரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கருணாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கருணாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மர்ம கும்பல் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குலையன்கரிசல் பகுதியில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தி.மு.க. பிரமுகர் கருணாகரனுக்கும், அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அந்த தகராறு காரணமாக கருணாகரன் கொலை செய்யப்பட்டாரா?,

அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் குலயன்கரிசலை சேர்ந்த செல்வராஜ் மகன் சுரேஷ் என்பவர் தி.மு.க.இளைஞரணி ஒன்றிய அமைப்பாளராக இருந்து வந்தார். பின்னர் அவர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு கருணாகரன் தான் காரணம் என சுரேஷ் கருதியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

எனவே அந்த விவகாரத்தில் கருணாகரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். ஆகவே இது தொடர்பாக சுரேஷ், முருகேசன் மகன் ரமேஷ், பூலோக பாண்டி மகன் இளையராஜா, ராமலிங்கம் மகன் பாண்டி, தனராஜ் மகன் ராஜலிங்கம், பாலகிருஷ்ணன் மகன் சண்முகஜோதிவேல் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று 6 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News