சூறாவளி காற்று: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ராமேசுவரம்:
ராமேசுவரத்தை யொட்டியுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக ஆழ் கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
எனவே நேற்று ராமேசுவரம், பாம்பன், மீன் வளத்துறை அலுவலகத்தில் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. ஆழ்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டது.
அதனையும் மீறி கடலுக்கு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதன் காரணமாக நேற்று இரவு முதல் மீனவர்கள் யாரும் கட லுக்கு செல்லவில்லை. ராமேசுவரம், பாம்பன் துறைமுகத்தில் 900-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. திடீர் தடை காரணமாக 4,500 மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றும் ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளில் சூறாவளி காற்று வீசி வருகிறது.