நெகமம் அருகே நண்பரின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி சிறையில் அடைப்பு
நெகமம்:
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள ஆவலப்பம் பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி ரஞ்சிதா (38).
அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28).கூலித் தொழிலாளி. இவர் சுப்பிரமணியத்தின் நண்பர் ஆவார். இதனால் மணிகண்டன் அடிக்கடி சுப்பிரமணியம் வீட்டிக்கு சென்று வந்துள்ளார்.
அப்போது ரஞ்சிதா குளிப்பதை பார்த்து ரசித்துள்ளார் மேலும் மணிகண்டனுக்கு ரஞ்சிதா மீது ஆசை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சுப்பிரமணியம் வேலைக்கு சென்றவுடன் அவரது வீட்டிற்கு மணிகண்டன் சென்றுள்ளார். அங்கிருந்த ரஞ்சிதாவிடம் நீ குளிக்கும் போதும், சேலை மாற்றும் போதும் எடுத்த ஆபாச படங்களை வைத்து உள்ளேன்.
நீ எனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் இவற்றை அனைவரிடமும் காட்டி அவமானப்படுத்தி விடுவேன் என மிரட்டி உள்ளார்.
மேலும் ரஞ்சிதாவின் சேலையை பிடித்து இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதற்கு ரஞ்சிதா இடம் கொடுக்கவில்லை. இது குறித்து அவர் மணிகண்டனின் மனைவி சந்தியாவிடம் கூறி உள்ளார். ஆனால் அவர் கணவரை கண்டிக்கவில்லை. அவருக்கு ஆதரவாக பேசி உள்ளார்.
இதனை ரஞ்சிதா தனது கணவர் சுப்பிரமணியத்திடம் கூறி அழுதார். பின்னர் நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மணிகண்டன் மனைவி சந்தியாவை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தற்போது பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தில் இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.