செய்திகள்
தற்கொலை

ஜோதிடரின் ‘செக்ஸ்’ டார்ச்சரால் 5 குழந்தைகளின் தாய் தற்கொலை

Published On 2019-07-13 11:06 GMT   |   Update On 2019-07-13 11:06 GMT
கரூர் அருகே ஜோதிடரின் ‘செக்ஸ்’ டார்ச்சரால் 5 குழந்தைகளின் தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளித்தலை:

கரூர் மாவட்டம் தோகைமலை ஆத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி சங்கீதா (வயது 29). இவர்களுக்கு பெரியநாயகி (13), பாண்டி மீனா(11), சந்தோஷ்குமார்(9), பொன்னர் (5), ரத்தினம் (3) ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு தங்கவேல் உடல்நிலை சரியில்லாததால் இறந்து விட்டார். இதனால் குழந்தைகளுடன் சங்கீதா தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவரது வீட்டின் அருகில் சங்கர் (30) என்பவர் வசித்து வந்தார். கிளி ஜோதிடரான அவர், பக்கத்து வீடு என்பதால் சங்கீதாவுடன் பழகி வந்துள்ளார். மேலும் கணவனை இழந்து தனியாக வசித்து வந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட சங்கர், சங்கீதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் பயந்து போன சங்கீதா, தனது பெற்றோர் ஊரான கீழ வெளியூருக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். ஆனாலும் சங்கர் கீழவெளியூருக்கு சென்றும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சங்கீதா கல்லடை அருகே உள்ள தரிசி காட்டில் வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கீதாவின் சகோதரர் சதீஷ் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சங்கீதாவுக்கு கிளிஜோதிடர் சங்கர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், இதனால் சங்கீதா தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சங்கரை கைது செய்தனர்.

ஜோதிடரின் பாலியல் தொல்லையால் 5 குழந்தைகளையும் தவிக்க விட்டு, தாய் தற்கொலை செய்த சம்பவம் தோகைமலை பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News