செய்திகள்
அரசு பஸ் டிரைவர் - கண்டக்டர்

மாணவிகளை பஸ் நிறுத்தத்தில் இறக்கி விடாத அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர் சஸ்பெண்டு

Published On 2019-07-11 06:22 GMT   |   Update On 2019-07-11 06:22 GMT
தாராபுரம் மாணவிகளை பஸ் நிறுத்தத்தில் இறக்கி விடாத அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை சஸ்பெண்டு செய்து அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் மங்கலம்பாளையத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் தாராபுரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன் மங்கலம் பாளையத்தை சேர்ந்த 5 மாணவிகள் ஒரு ஆசிரியை ஆகியோர் தாராபுரத்தில் இருந்து மங்கலம் பாளையத்திற்கு ஈரோட்டில் இருந்து பழனிக்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்கள்.

அவர்களை மங்கலம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் டிரைவர் சையது அபுதாகீர், கண்டக்டர் ராம்நாத் ஆகியோர் இறக்கி விடாமல் 3 கிலோ மீட்டர் தாண்டி வந்து தேர்பட்டியில் இறங்குமாறு கூறினார்கள்.

அங்கு மாணவிகள் இறங்க மறுத்தனர். அவர்களை டிரைவர், கண்டக்டர் பழனிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மாணவிகள் மற்றும் ஆசிரியை ஆகியோரை டிரைவர், கண்டக்டர் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதற்கிடையே மாணவிகள் வீட்டிற்கு வராதததை அறிந்த அவர்களது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் விசாரித்தபோது மாணவிகள் பழனியில் இருப்பது தெரிய வந்தது. மாணவிகளை மீட்டு வரும்படி அவர்களது பெற்றோர், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாணவிகள் அதே பஸ்சில் மங்கலம் பாளையம் அழைத்து வரப்பட்டனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செல்லமுத்து என்பவர் அலங்கியம் போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து டிரைவர் சையது அபுதாகீர், கண்டக்டர் ராம்நாத் மீது பொது இடத்தில் தரக்குறைவாக பேசுவது, அத்துமீறி பயணிகளை துன்பத்திற்கு ஆளாக்குவது ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே பொதுமக்கள் தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமாரிடமும் புகார் தெரிவித்தனர். அவர் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து டிரைவர் சையது அபுதாகீர், கண்டக்டர் ராம் நாத் ஆகியோரை சஸ்பெண்டு செய்து அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் குணசேகரன் உத்தரவிட்டுள்ளார்.


சஸ்பெண்டு செய்யப்பட்ட அரசு பஸ் டிரைவர் - கண்டக்டர்.
Tags:    

Similar News