பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை உற்பத்தி ஆலைக்கு சீல் வைப்பு
பொள்ளாச்சி:
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ரங்கசமுத்திரத்தில் பூட்டப்பட்டு கிடந்த ஓரு குடோனில் இருந்து நேற்று இரவு லாரியில் பிளாஸ்டிப் பைகள் ஏற்றி கொண்டு இருந்தனர்.இந்த தகவல் கிடைத்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். லாரியை அவர்கள் சிறை பிடித்தனர். இது குறித்து பொள்ளாச்சி தாசில்தார் தணிகை வேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கு விரைந்து வந்தார்.
அப்போது அந்த குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயார் செய்யும் தொழிற்சாலை இயங்கி வந்தது தெரிய வந்தது. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாளில் இங்கு பிளாஸ்டிக் பைகளை தயார் செய்து வெளி இடங்களுக்கு அனுப்பி வந்துள்ளனர்.
விடுமுறை நாட்களில் அதிகாரிகள் யாரும் சோதனைக்கு வர மாட்டார்கள் என கருதி பிளாஸ்டிக் பைகள் தயாரித்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தயாரித்த அந்த ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதன் உரிமையாளர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள். உரிமையாளரை கண்டுபிடித்து அபராதம் விதிக்க உள்ளனர்.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஆலைக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.