செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகள்.

ஆம்னி பஸ்சில் கடத்திய 700 கிலோ குட்கா பறிமுதல்- 5 பேர் கைது

Published On 2019-06-25 06:19 GMT   |   Update On 2019-06-25 06:19 GMT
திண்டுக்கல் அருகே ஆம்னி பஸ்சில் கடத்தி வந்த 700 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சின்னாளபட்டி:

பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு தனியார் ஆம்னிபஸ் திண்டுக்கல் நோக்கி வந்துகொண்டிருந்தது. இந்த பஸ்சில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி. சக்திவேலுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் வெளியூரில் இருந்து வந்த ஆம்னி பஸ்களை ரகசியமாக கண்காணித்தனர். போலீசார் தங்களை கண்காணிப்பதை அறிந்ததும் ஆம்னி பஸ்சை திண்டுக்கல்லில் நிறுத்தாமல் அண்ணாமலையார் மில்ஸ் காலனி பகுதியில் நிறுத்தினர்.

பின்னர் அந்த பஸ்சில் இருந்த 700 கிலோ குட்கா பொருட்களை மற்றொரு கார் மற்றும் மினி லாரியில் ஏற்ற முயன்றனர். அங்கு அம்பாத்துரை போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர்.

குட்கா கடத்தலில் ஈடுபட்ட ஆம்னி பஸ் டிரைவரான ஓமலூரைச் சேர்ந்த குணசேகரன், சேலத்தை சேர்ந்த பார்த்திபன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் குட்காவை கடத்தி வந்த திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த புகாரி, சாதிக்பாட்சா, மவுலானா ஆகியோரையும் கைது செய்தனர்.

பிடிபட்ட குட்காவின் மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மினி லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? எனவும் அம்பாத்துரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News