செய்திகள்

சேலம் அருகே மனைவி கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி

Published On 2019-06-25 05:22 GMT   |   Update On 2019-06-25 05:22 GMT
சேலம் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கணவர் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள வெடிகாரன்புதூர், நாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 40). மரம் அறுக்கும் கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தங்கமணி (37). இவர்களுக்கு மவுனிகா (20) என்ற மகளும், ரவிக்குமார் (18) என்ற மகனும் உள்ளனர். இதில் மவுனிகாவுக்கு திருமணமாகி விட்டது. ரவிக்குமார் தறி வேலை செய்து வருகின்றார்.

இந்த நிலையில் பாலசுப்பிரமணிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. அவர், கூலிவேலை செய்வதன் மூலம் கிடைக்கும் சம்பள தொகையை குடும்ப செலவுக்கு கொடுக்காமல் மது வாங்கி குடித்து வந்தார்.

தனது கையில் பணம் இல்லாத நேரங்களில் தங்கமணியிடம் பணம் கேட்டு பிரச்சினை செய்து வந்தார்.

வீட்டில் பணம் இல்லாதபோது, வெளி நபர்களிடம் கடனாக பணம் வாங்கி மது குடித்து வந்தார். நாளடைவில் கடன் தொகை அதிகமானது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டு அவரிடம் வற்புறுத்தி வந்தனர்.

இதனால் தனது மனைவி தங்கமணியிடம் எனக்கு கடன் அதிகமாக உள்ளது. உனது பெற்றோர் வீட்டிற்கு சென்று பணம் அல்லது நகை வாங்கிவா? என பாலசுப்பிரமணி கூறி தகராறு செய்தார்.

இதனால் தங்கமணி அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று 5 பவுன் நகை வாங்கி வந்து, பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்தார்.

பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரிடம், வீட்டில் கழிப்பிடம் கட்டுவதற்கு ரூ.50 ஆயிரம் தனது பெற்றோரிடம் இருந்து வாங்கி வந்து தங்கமணி கொடுத்தார்.

இருப்பினும் பணம் கேட்டு தொடர்ந்து பால சுப்பிரமணி தொந்தரவு செய்தார்.

இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது கணவர் மீது மல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் குடித்து விட்டு வந்து தினமும் அடிக்கிறார். குடும்ப பிரச்சினையாக இருக்கிறது. ஒவ்வொரு வி‌ஷயத்திற்கும் காரணம் இல்லாமல் சண்டை போடுகிறார் என கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீசார், பாலசுப்பிரமணியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து, இனிமேல் மனைவியை அடிக்கக் கூடாது என சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் வீட்டில் மறுபடியும் சண்டை போட்டார். இதனால் கோபித்துக் கொண்டு தங்கமணி, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கியிருந்தார்.

இன்று காலையில் தங்க மணி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அவரது தந்தை மாதேஸ்வரன் இளநீர் விற்பதற்கு வழக்கம் போல் வெளியே சென்றார்.

இதையறிந்த பால சுப்பிரமணி அங்கு சென்று தனியாக இருந்த தங்கமணியிடம் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் வரமறுத்ததால் மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணிய தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென தங்கமணியின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்.

கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியதால் தங்கமணி, பக்கத்தில் கிடந்த ஒரு துண்டு துணியை எடுத்து கழுத்தில் கட்டிக் கொண்டு, நேராக தம்பி வீட்டிற்கு ஓடினார். அங்கு அவரிடம் எனது கணவர் கழுத்தை அறுத்து விட்டு ஓடி விட்டார் என சொல்லிவிட்டு மயங்கி விழுந்தார்.

உடனே, அவரது தம்பி, ரத்த வெள்ளத்தில் கிடந்த சகோதரி தங்கமணியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இது குறித்து மல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாலசுப்பிர மணியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News