செய்திகள்

காதலித்த பெண்ணுக்கு திருமணமானது தெரிந்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி

Published On 2019-06-24 11:07 GMT   |   Update On 2019-06-24 11:07 GMT
நெல்லையில் ‘டிக்-டாக்’ செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்த பெண்ணுக்கு திருமணமானது தெரிந்ததால் வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். காதலனை பார்க்க வந்த காதலியும் வி‌ஷம் குடித்தார்.

நெல்லை:

பாளையங்கோட்டை இலந்தைகுளம் பகுதியை சேர்ந்தவர் மரியபுஷ்ப ராஜ் (வயது 22) ஆட்டோ டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. இவர் செல்போனில் அடிக்கடி டிக்-டாக் செயலியை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. அப்போது மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சங்கீதா (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 5 மாதமாக மரியபுஷ்பராஜ் அடிக்கடி மதுரை சென்று தனது காதலி சங்கீதாவை தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். மேலும் இருவரும் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்துள்ளனர். இதனால் சங்கீதா கர்ப்பமானார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மரிய புஷ்பராஜிடம், சங்கீதா வலியுறுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து திருமணம் குறித்து பேசுவதற்காக மரிய புஷ்பராஜும், அவரது உறவினர்களும் மதுரை சென்றனர். அப்போது சங்கீதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருவதும் தெரியவந்தது.

இதனால் மனமுடைந்த மரிய புஷ்பராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட சங்கீதா, மரிய புஷ்பராஜை பார்ப்பதற்காக நேற்று நெல்லை வந்தார். பின்னர் மதுரை செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்த அவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News