செய்திகள்

இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து

Published On 2019-06-24 09:21 GMT   |   Update On 2019-06-24 09:21 GMT
சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் பேரவை தேர்தலில் இந்திய கல்லூரி வரலாற்றிலேயே முதன்முறையாக திருநங்கை வெற்றிப் பெற்றுள்ளார். அவருக்கு கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை:

திண்டுக்கலைச் சேர்ந்தவர் நளினா பிரஷீதா. இவர் திருநங்கை ஆவார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் எம்எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்த கல்லூரியில் 2019-2020ம் ஆண்டுக்கான மாணவர் தேர்தல் கடந்த 20ம் தேதி நடைப்பெற்றது. இதில் நளினா 320 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று கல்லூரியின் துணை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய கல்லூரி வரலாற்றிலேயே திருநங்கை கல்லூரி யூனியனில் வெற்றிப் பெற்றது இதுவே முதன்முறையாகும். இந்த வெற்றி குறித்து நளினா கூறியதாவது:

லயோலா எனக்கு தாயைப் போல. நான் இன்று எப்படி இருக்கிறேனோ அதற்கு கல்லூரிதான் மிக முக்கிய காரணம். எனது நண்பர்கள், பேராசியர்கள் எனக்கு நல்ல ஆதரவு அளித்தார்கள்.

பெண்களுக்கான விளையாட்டு மற்றும் நடன குழுக்களை அமைக்க திட்டம் வைத்துள்ளேன். மேலும் பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி வகுப்புகளையும் அறிமுகப்படுத்த திட்டம் உள்ளது.



ஆண், பெண் போன்று திருநங்கை என்பதும் பாலினம்தான். எவ்வித  வித்தியாசமும் இல்லை. உங்களைப்போல நாங்களும் இந்நாட்டில் வசிப்பவர்கள்தான். ஆனால், திருநங்கைகள் வளர்ச்சிக்கென போதுமான வசதிகள் செய்யப்படவில்லை.

முதன்முறையாக இந்த கல்லூரியில் சேர்ந்தபோது மிகவும் கூச்சப்பட்டேன். ஆனால், எனக்கு தானாகவே நல்ல நண்பர்கள் அமைந்தார்கள். முதலில் சிலர் என்னை கேலி செய்தனர். பின்னர் காலப்போக்கில் நண்பர்களாக்கிக் கொண்டேன்.



இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி நளினாவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை சகோதரி நளினா பிரசிதா அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி.

நளினா அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்’ என வாழ்த்துக் கூறி பதிவிட்டுள்ளார்.







Tags:    

Similar News