செய்திகள்

ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் கொலை? - கணவர் தப்பி ஓட்டம்

Published On 2019-06-23 14:17 GMT   |   Update On 2019-06-23 14:17 GMT
காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கில் பிணமாக கிடந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரத்தநாடு:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 25). இவரும் குணசுந்தரி (23) என்பவரும் காதலித்து வந்தனர். அவர்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணத்துக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் இருவரும் 20 நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த நெய்வாசல் சமத்துவபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கு வசித்து வந்தனர்.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து குணசுந்தரி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், குணசுந்தரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலை மறைவான சிவக்குமாரை தேடி வருகிறார்கள்.

குணசுந்தரி சாவில் மர்மம் நிலவுவதால் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டாரா? அல்லது தற்கொலைக்கு தூண்டினாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமான ஒரு மாதத்துக்குள் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்ததால் ஆர்.டி.ஓ. சுரேசும் மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News