செய்திகள்

தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைந்தால் ஏற்போம்- கடம்பூர் ராஜூ பேட்டி

Published On 2019-06-23 11:45 GMT   |   Update On 2019-06-23 11:45 GMT
தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைந்தால் தாய் உள்ளத்தோடு ஏற்போம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்வர் ஆய்வு கூட்டம் நடத்தி, தேவையான சிறப்பு நிதிகளை ஒதுக்கி போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறார். சென்னைக்கு மட்டும் ரூ. 200 கோடி நிதி ஒதுக்கி ஜோலார் பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளார்.

பிரிந்தவர்கள் இணைவது வழக்கம். ஏற்கனவே அ.தி.மு.க. வில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று முதல்வர், துணை முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்க தமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் இணைவது என்றால் அது அவரது விருப்பம். அவரை தாய் உள்ளத்தோடு ஏற்போம். அவர் மட்டுமின்றி அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யார் இணைந்தாலும் ஏற்றுக்கொள்வோம். சசிகலா, தினகரன் இருவரும் தலைமை தாங்கி தனியாக இயக்கத்தினை தொடங்கியவர்கள். மற்றவர்கள் அப்படி இல்லை. இயக்கத்தினை தொடங்கியவர்களுக்கும், இணைந்தவர்களுக்கும் வேறுபாடு உண்டு. அங்கு சென்றவர்கள் திரும்பி வருகின்றனர். அவர்களை நாங்கள் தாய் உள்ளத்தோடு ஏற்றுக்கொள்கிறோம்.


தமிழக மக்கள் என்றைக்குமே ஆன்மீகவாதிகள், நாத்திகத்தினை கொள்கையாக கொண்டு இருந்தாலும், பெரும்பாலான மக்கள் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டு இருப்பதால் அவர்களின் நம்பிக்கை பொய்யாக போய் விடக்கூடாது என்பதற்காக கோவில்களில் யாக பூஜைகளை செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News