செய்திகள்

திருவள்ளூர் அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதல்: 3 பேர் பலி

Published On 2019-06-22 07:25 GMT   |   Update On 2019-06-22 07:25 GMT
திருவள்ளூர் அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர்:

சென்னை பம்மல் பகுதியை சேர்ந்தவர் சாய் சந்திரசேகர் ( வயது35). காப்பீட்டு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி புஷ்கலா(35). இவர்களுக்கு கைலாஷ்(9), தருண் கிருஷ்ணா(3) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

சாய் சந்திரசேகர் நேற்று பம்மலில் உள்ள தனது வீட்டிலிருந்து தனது காரில் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றார். தரிசனம் முடித்துவிட்டு திருப்பதியிலிருந்து புறப்பட்டு பம்மலுக்கு வந்து கொண்டிருந்தனர்.

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அருகே உள்ள நாராயணபுரம் கூட்டுச்சாலையில் வரும்போது சென்னையிலிருந்து திருப்பதி நோக்கி எதிரே சென்ற கண்டெய்னர் லாரி திடீரென்று காரின் மீது மோதியது. இதில் சாய் சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த புஷ்கலா, கைலாஷ், தருண் கிருஷ்ணா ஆகிய 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் புஷ்கலா, தருண் கிருஷ்ணா ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். கைலாஷ் காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News