செய்திகள்
மரணமடைந்த ராமச்சந்திரன்.

மலேசியா- திருச்சி விமானத்தில் பயணி திடீர் மரணம்

Published On 2019-06-22 04:41 GMT   |   Update On 2019-06-22 04:41 GMT
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணி திடீரென உயிரிழந்தார். இதனால் பயணியின் உறவினர்கள் விமான நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கே.கே.நகர்:

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்றிரவு ஏர் ஏசியா விமானம் புறப்பட்டது. அதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் கிராமம் ராசிபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 31) என்பவர் திருச்சிக்கு புறப்பட்டார்.

திருச்சி விமான நிலையத்தில் விமானம் இறங்கியதும், அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். ஆனால் ராமச்சந்திரன் மட்டும் இருக்கையில் தூங்கிய நிலையில் அமர்ந்திருந்தார். இதையடுத்து விமான பணிப்பெண்கள், அவரை எழுப்பிய போது எந்தவித உணர்வும் இல்லாமல் இருந்தார். உடனே பணிப்பெண்கள் விமான நிலைய மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மருத்துவர்கள் விரைந்து சென்று ராமச்சந்திரனை பரிசோதித்தனர். அப்போது அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகள் செய்தனர். ஆம்புலன்சில் ஏற்றுவதற்காக ராமச்சந்திரனை விமானத்தில் இருந்து இறக்கிய போது அவர் திடீரென மரணமடைந்தார். இதனால் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இது குறித்து ராமச்சந்திரனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திருச்சி விமான நிலையத்திற்கு விரைந்து வந்து உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர்.

இதனிடையே ராமச்சந்திரன் விமானத்தில் இருந்து இறங்கியதும் இறந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் ராமச்சந்திரனின் உறவினர்கள், விமானத்தில் வரும் போதே ராமச்சந்திரன் இறந்துள்ளார். விமான பணிப்பெண்கள் சரியாக கவனிக்காமல் இருந்துள்ளனர். எனவே ராமச்சந்திரன் பலியானதற்கு இழப்பீடாக காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று முறையிட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து ராமச்சந்திரன் உறவினர்களிடம் விமான நிலைய இயக்குனர் குணசேகரன்,ஏர்போர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரி, பொன்மலை இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த 12 வருடங்களாக மலேசியாவில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்த ராமச்சந்திரன், கடந்த 2017ம் ஆண்டு ஊருக்கு வந்து விட்டு பின்னர் மீண்டும் மலேசியா புறப்பட்டு சென்றார். நேற்றிரவு மலேசியாவில் இருந்து திருச்சி திரும்பிய போது, விமானத்தில் வைத்து அவருக்கு இருமல் அதிகமாக இருந்துள்ளது. அதன்பிறகு அவர் இருக்கையிலேயே சாய்ந்தபடி தூங்கி விட்டார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரிகிறது. அல்லது மர்ம காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு இறந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமச்சந்திரனுக்கு திருச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
Tags:    

Similar News