திருமணத்துக்கு பெண் தர மறுத்ததால் தொழிலாளியின் மகளை கடத்தி பாலியல் பலாத்காரம்- வாலிபரை கைது
திருச்சி:
திருச்சி-மதுரை சாலையில் உள்ள குப்பாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவரது தாய் குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். தந்தையும், சகோதரர் ஜெகதீசனும் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர்.
இளம்பெண்ணின் மிகவும் நெருங்கிய உறவினர் சுரேஷ்குமார் (வயது 21). இவரும் காந்தி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சுரேஷ்குமார் கடந்த சில ஆண்டுகளாக அந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் காதலை ஏற்க மறுத்து விட்டார்.
இருந்தபோதிலும் சுரேஷ் குமார் தனது பெற்றோர் மூலம் முறைப்படி திருமணம் செய்ய விரும்பி பெண் கேட்டுள்ளார். ஆனாலும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ்குமார் எப்படியாவது அந்த பெண்ணை அடைந்தே தீரவேண்டும் என்று திட்டம் வகுத்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி சுரேஷ்குமார் ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணை சமயபுரம் கோவிலுக்கு அழைத்து சென்று தாலி கட்டியுள்ளார். பின்னர் அவரை தென்னூர் இனாந்தார்தோப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அந்த பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுவிட்டு சென்றார். நடந்த சம்பவம் பற்றி அந்த பெண் தனது சகோதரர் ஜெகதீசனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சித்ரா 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். முடிவில் ஏமாற்றி இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக சுரேஷ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.