செய்திகள்

குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி சென்னையில் தி.மு.க. போராட்டம்

Published On 2019-06-20 09:35 GMT   |   Update On 2019-06-20 09:36 GMT
சென்னையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி இன்று முதல் தி.மு.க.வினர் வார்டு வாரியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை:

தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் கடுமையாக உள்ளது.

நிலத்தடி நீர் மட்டம் வறண்டு விட்டதால் லாரி தண்ணீரை நம்பி பெரும்பாலான மக்கள் காத்து கிடக்கிறார்கள்.

பல்வேறு இடங்களில் பொதுகழிப்பிடங்களும் தண்ணீர் இன்றி மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் குடிப்பதற்கும், வீட்டு உபயோகத்திற்கும் தண்ணீருக்கு தவிக்கிறார்கள்.

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அரசு போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தி.மு.க. குற்றம்சாட்டி வருகிறது.

அ.தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 22-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று முதல் தி.மு.க.வினர் வார்டு வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அந்தந்தப் பகுதி வட்ட தி.மு.க. நிர்வாகிகள் காலிகுடங்களுடன் பெண்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தி.நகரில் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசிய தாவது:-

அ.தி.மு.க. அரசு தண்ணீர் பிரச்சினையில் போதிய அக்கறை காட்டவில்லை. மக்கள் கடும் பாதிப்பு அடைந்த போதிலும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறி வருகிறார்.

மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது அரசின் கடமையாகும். ஆனால் பிரச்சினையை மூடி மறைக்கும் நோக்கத்தில் அரசின் செயல்பாடு உள்ளது.

இதனால் எங்களால் இயற்ற அளவு பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகிறோம். அரசும் முழு அளவில் மக்களுக்கு தண்ணீர் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் ஜெ.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 22-ந்தேதி மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் இன்று முதல் 3 நாட்களுக்கு வார்டு வாரியாக நாங்கள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி உள்ளோம்.

எங்கள் மாவட்டத்தில் 12 பகுதி கழகம் சார்பில் தினமும் 2 வார்டுகள் வீதம் 24 வட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. வருகிற 25-ந்தேதி சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே போல் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் பெரம்பூரில் இன்று காலை தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தாயகம் கவி எம்.எல்.ஏ., பகுதி செயலாளர்கள் முரளி, தேவஜவகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை தெற்கு மாவட்டத்தில் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. இன்று வார்டு வாரியாக போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் வார்டு வாரியாக தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News