செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் தற்கொலை தோழியின் கணவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை

Published On 2019-06-19 16:40 GMT   |   Update On 2019-06-19 16:40 GMT
கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் தற்கொலைக்கு துண்டிய தோழியின் கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை அருகே உள்ள நலகொண்டலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(33). விவசாயி. இவருக்கும் இவரது மனைவி ராதா(27) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு ஜுன் மாதம் 23-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராதாவை அவரது கணவர் சங்கர் அடிக்க துரத்தி வந்துள்ளார். இதில் பயந்துபோன ராதா, அதே பகுதியில் உள்ள தனது தோழியான காயத்ரி(23) என்பவரது வீட்டிற்குள் நுழைந்து மறைந்த கொண்டார். 

இதையடுத்து அங்குவந்த சங்கர், தனது மனைவி ராதா இங்கு வந்தாரா என காயத்ரியிடம் கேட்கிறார். காயத்ரியோ இங்கு வரவில்லை என கூறுகிறார். அதை நம்பாத சங்கர், காயத்ரி வீட்டிற்குள் நுழைந்து, தனது மனைவியை தேடுகிறார். 

அப்போது அங்கு மறைந்திருந்த ராதாவை வெளியே இழுத்து வந்ததுடன், காயத்ரியை தனது கையால் அடித்ததுடன், அசிங்கமான வார்த்தைகளால் திட்டுகிறார். இதனால் மனஉளைச்சல் அடைந்த காய்திரி அன்றே தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இது குறித்து மகாராஜ கடை போலீசார் விசாரணை நடத்தி, காயத்ரியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்து, சங்கரை கைது செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் மனைவியின் தோழியை தற்கொலைக்கு தூண்டிய காரணத்திற்காக விவசாயி சங்கருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தாக்கி, அசிங்கமான வார்த்தையால் திட்டியதற்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.6ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜரானார்.
Tags:    

Similar News