தர்மபுரி அருகே வெல்டிங் பட்டறையில் நின்ற லாரி தீப்பிடித்து எரிந்தது
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூரைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் அதேபகுதியில் ஒரு வெல்டிங் பட்டறை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது பட்டறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் டாரஸ் லாரியை கொண்டு விட்டு பழுது பார்க்க கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இன்று காலை அந்த லாரியை முனியப்பன் வெல்டிங் வைத்து பழுது பார்த்தபோது டீசல் டேங்க அருகே திடீரென்று தீப்பொறி விழுந்து தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் அந்த லாரியில் தீ பரவ தொடங்கியது.
இதில் லாரியின் பின்பகுதி எரிய தொடங்கி யதும் முனியப்பன் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் வெல்டிங் பட்டறையில் திரண்டு வந்தனர்.
அப்போது அவர்கள் அருகே இருந்த தண்ணீர் டேங்கர் லாரி ஒன்றை வரவழைத்து டாரஸ் லாரியில் பிடித்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தர்மபுரி தீயணைப்பு படையினருக்கும், தொப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வந்து லாரியில் பிடித்த தீயை முழுமையாக அணைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் லாரியில் டீசல் டேங்க் அருகே முனியப்பன் வெல்டிங் வைத்தபோது தீப்பொறி விழுந்து லாரி தீப்பிடித்தது. இதில் லாரியின் 12 டயர்களில் 4 டயர்களும், லாரியின் பின்பகுதியும் எரிந்து நாசமானது.