செய்திகள்

ஆரணி-பூந்தமல்லியில் சோதனை - பிளாஸ்டிக் பைகளை விற்ற கடைகளுக்கு அபராதம்

Published On 2019-06-19 07:24 GMT   |   Update On 2019-06-19 07:24 GMT
ஆரணி மற்றும் பூந்தமல்லியில் பிளாஸ்டிக் பைகளை விற்ற கடைகளுக்கு அதிகாரிகள் ரூ. 28 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.
பெரியபாளையம்:

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையும் மீறி பலர் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியின் செயல் அலுவலர் மாலா தலைமையில் இளநிலை உதவியாளர் மோகன கிருஷ்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஹரிபாபு, கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆரணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஆரணி துலுக்க தெருவில் ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஆரணி பஜார் வீதியில் மூன்று கடைகளில் சுமார் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பேரூராட்சி அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோன் உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரமும், பஜார் வீதியில் உள்ள 3 கடைகளுக்கு தலா ரூபாய் ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி கமி‌ஷனர் டிட்டோ தலைமையில் சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் சோதனை நடத்தினார்.

அப்போது தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News