திருவண்ணாமலை அருகே ரேசன் கடையில் நெரிசலில் சிக்கி மூதாட்டி மரணம்
திருவண்ணாமலை, ஜூன்.17-
திருவண்ணாமலை அருகே ரேசன் கடையில் பொருட்கள் வாங்க சென்ற மூதாட்டி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.
திருவண்ணாமலை அருகே உள்ள மோட்டூரை சேர்ந்தவர் தனபாக்கியம் (வயது 63). இவர் இன்று காலை ரேசன் பொருட்கள் வாங்க இனாம்காரியாந்தல் பகுதியில் உள்ள ரேசன் கடைக்கு சென்றார்.
இந்த ரேசன்கடை வாரம் 1 நாள் மட்டும் திறக்கப்படுவதால் கூட்டம் அதிகளவில் இருக்கும். எனவே தனபாக்கியம் கடை திறப்பதற்கு முன்பாகவே அங்கு சென்று காத்திருந்தார். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகளவில் சேர்ந்தது.
ரேசன் கடை ஊழியர்கள் கடையை திறந்ததும் பொதுமக்கள் பொருட்களை வாங்க முண்டியடித்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய தனபாக்கியம் மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டி உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.