செய்திகள்

திருச்சி அருகே இன்று அதிகாலை விபத்து - 2 பெண்கள் பலி

Published On 2019-06-15 05:25 GMT   |   Update On 2019-06-15 05:25 GMT
திருச்சி அருகே இன்று அதிகாலை விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மண்ணச்சநல்லூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் திருநகர் ஆஸ்பிட்டல் காலனி பகுதியை சேர்ந்தவர் பிலிப் ஆண்டனி. இவர் மற்றும் அவரது உறவினர்கள் 9 பேர் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு செல்வதற்காக நேற்றிரவு ஒரு காரில் புறப்பட்டனர். காரை பிலிப் ஆண்டனி ஓட்டினார்.

இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மான்விழிமங்களம்திருச்சி- சேலம் சாலையில் அய்யன்வாய்க்கால் தடுப்பணை பகுதியில் செல்லும் போது , திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, தடுப்பணையின் சாலையோர தடுப்பு கம்பியில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் கார் பலத்த சேத மடைந்தது. காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினர். இது குறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிகாலை நேரம் என்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு காரில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

அப்போது காரில் இருந்த பிலிப் ஆண்டனி மனைவி ஸ்டெல்லா ஜெயந்தி(வயது 32) மற்றும் எமல்டா ஜூலியட்(35) ஆகிய 2பேரும் உடல் நசுங்கி காருக்குள்ளேயே பலியானது தெரியவந்தது.

காரில் இருந்த பிலிப் ஆண்டனி, அருள்ராஜ், சேவியர் ராஜ் மற்றும் 4 குழந்தைகள் பலத்த காயமடைந்திருந்தனர். அவர்களை உடனே மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிலிப் ஆண்டனி தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News