செய்திகள்
பாபநாசத்தில் வங்கி ஏடிஎம் கார்டை மாற்றி முதியவரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி
பாபநாசத்தில் வங்கி ஏடிஎம் கார்டை மாற்றி முதியவரிடம் நூதன முறையில் ரூ.20 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இது குறித்த புகான் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி திருப்பாலத்துறை மேல தெருவில் வசித்து வருபவர் அப்துல் ஹமீது (வயது 68). இவர் கத்தார் நாட்டில் டிரைவராக பணியாற்றியவர். தற்போது ஊருக்கு வந்து வசித்து வருகிறார். இவர் பாபநாசம் வடக்கு வீதியில் உள்ள ஒரு வங்கியின் முன்புறம் அமைந்துள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.5 ஆயிரம் பணம் எடுக்க முயன்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அப்துல் ஹமீதுக்கு உதவி செய்வதுபோல் நடித்து, ஏ.டி.எம். கார்டை அவரிடமிருந்து பெற்று ஏ.டி.எம். கார்டை இயந்திரத்தில் சொருகி பணம் இல்லை என தெரிவித்துள்ளார். பின்னர் மர்ம ஆசாமிகள் வேறொரு ஏ.டி.எம். கார்டை அப்துல் ஹமீதிடம் கொடுத்துவிட்டு அவரது கார்டை எடுத்து சென்று விட்டனர்.
பின்னர் கபிஸ்தலத்தில் ரூ.15 ஆயிரம் எடுத்துள்ளனர். அய்யம்பேட்டைக்கு சென்று அங்கு ரூ.5 ஆயிரம் எடுத்துக்கொண்டனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அப்துல் ஹமீது வங்கிக்கு சென்று கையிருப்பை சரி பார்த்தபோது ரூ. 20 ஆயிரம் பணம் எடுத்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல் ஹமீது கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.