விளையாட்டு
ஒரு ரன்னில் இரட்டை சதம் தவறவிட்ட மேத்யூஸ் - இலங்கை முதல் இன்னிங்சில் 397 ரன்னுக்கு ஆல் அவுட்
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஏஞ்சலோ மேத்யூஸ், சண்டிமால் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்தது.
சட்டோகிராம்:
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று சட்டோகிராமில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான கருணரத்னே 9 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஓஷாடா பெர்னாண்டோ 36 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூச் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குசால் மெண்டிஸ் அரை சதமடித்து 54 ரன்னில் ஆட்டமிழந்தார். சண்டிமால் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 66 ரன்னில் வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மேத்யூஸ் நிதானமாக ஆடி சதமடித்தார். இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 153 ஓவரில் 397 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
வங்காளதேசம் சார்பில் நயீம் ஹசன் 6 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.