செய்திகள்
டோனி

கொல்கத்தாவை சிஎஸ்கே வீழ்த்தியது: த்ரில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது - டோனி

Published On 2021-09-27 07:24 GMT   |   Update On 2021-09-27 07:24 GMT
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிவிட்டு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாடுவது கடினமானது என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஜடேஜா கூறியுள்ளார்.

அபுதாபி:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று அபுதாபியில் நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது. பின்னர் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கம் நன்றாக இருந்தது. முதல் விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தனர்.

ஆனால் அதன் பின் விக்கெட்டுகள் சரிந்ததால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி 2 ஓவரில் சென்னை அணி வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட போது களத்தில் ஜடேஜாவும், சாம்கர்ரனும் இருந்தனர். பிரசித் கிருஷ்ணா வீசிய 19-வது ஓவரில் ஜடேஜா 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்தார்.

அந்த ஓவரில் 22 ரன் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் 4 ரன் தேவைப்பட்ட போது இந்த ஓவரை சுனில் நரைன் வீசினார். முதல் 5 பந்துகளில் 3 ரன் எடுக்கப்பட்டது. சாம்கர்ரனும், ஜடேஜாவும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. அதில் தீபக் சாகர் ஒரு ரன் எடுத்தார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது. ஜடேஜா 8 பந்தில் 22 ரன் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

இந்த வெற்றியை பெற்றிருப்பது அருமையானது. சில நேரங்களில் நீங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவீர்கள். ஆனால் தோல்வி ஏற்பட்டுவிடும். நீங்கள் நன்றாக விளையாடாத போதும் வெற்றி பெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இரு அணிகளிலும் இருந்து நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் நாங்கள் நன்றாக பந்து வீசினோம். இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எளிதாக இருக்கவில்லை. 170 ரன் இலக்கு போதுமானது என்று தான் நினைக்கிறேன். கொல்கத்தா அணி விளையாடிய விதத்தை பாராட்டி ஆக வேண்டும்.

முக்கியமான வி‌ஷயம் என்னவென்றால் நாம் கற்றுக் கொண்டவற்றை பயன்படுத்தி மீண்டும் வலுவாக வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜடேஜா கூறும்போது, ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிவிட்டு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாடுவது கடினமானது. நான் பேட்டிங்கில் பயற்சிகளை மேற்கொண்டேன். இதற்கு முன் செய்ததை மீண்டும் செய்ய விரும்பினேன்.

19-வது ஓவரில் எடுத்த ரன்கள் மூலம் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியது. ருதுராஜ், டுபெலிசிஸ் நல்ல தொடக்கம் கொடுத்தனர்’ என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 8-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. கொல்கத்தா 6-வது தோல்வியை சந்தித்தது.

Tags:    

Similar News