செய்திகள்
3வது போட்டியில் அபார வெற்றி - டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை
இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா 20 ஓவரில் 81 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது.
கொழும்பு:
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 2 போட்டிகள் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் 14 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் களமிறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 36 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன.
அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 23 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார். இதனால் இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 81 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கை சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தசுன் ஷனகா 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 12 ரன்னும், பானுகா 18 ரன்னும், சமரவிக்ரமா 6 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துவெற்றி பெற்றது. தனஞ்செய டி சில்வா 23 ரன்னும், ஹசரங்கா 14 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதன்மூலம் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.