செய்திகள்
தவான்

விஜய் ஹசாரே தொடரில் விளையாடுவேன்: தவான்

Published On 2019-09-22 11:08 GMT   |   Update On 2019-09-22 11:08 GMT
தென்ஆப்பிரிக்கா தொடரில் விளையாடி வரும் தவான், டெல்லி அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வருபவர் ஷிகர் தவான். உலகக்கோப்பையில் ஏற்பட்ட காயம் சரியான பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களம் இறங்கினார்.

ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தற்போது தென்ஆப்பிரிக்கா தொடரில் விளையாடி வருகிறார். இன்றுடன் தென்ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைகிறது.

இதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டியில் தவான் விளையாடவில்லை என்பதால், செப்டம்பர் 24-ந்தேதி உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து தவான் கூறுகையில ‘‘நான் விஜய் ஹசாரே தொடரில் விளையாட இருக்கிறேன். அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் எந்தவொரு கிரிக்கெட்டில் விளையாடினாலும், ஈடுபாட்டுடன் விளையாடுவேன். அது விஜய் ஹசாரே, ரஞ்சி டிராபி அல்லது இந்திய அணியாக இருந்தாலும் சரி.

நான் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பதால் எனக்கு நேரம் கிடைக்கிறது. அதனால் வீட்டில் இருப்பது அல்லது பயிற்சி மேற்கொள்வதை விட, போட்டிகளில் விளையாடுவது என்னுடைய உறுதி மற்றும் திறமைக்கு சிறப்பானதாக இருக்கும். போட்டி பயிற்சி சிறந்த பயிற்சி. ஆகவே, இதை நான் சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன்.’’ என்றார்.
Tags:    

Similar News