செய்திகள்
சஞ்சு சாம்சன்

5-வது ஒருநாள் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி அபார வெற்றி: தொடரை 4-1 எனக் கைப்பற்றியது

Published On 2019-09-06 14:52 GMT   |   Update On 2019-09-06 14:52 GMT
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்தியா ‘ஏ’ அபார வெற்றி பெற்று தொடரை 4-1 எனக் கைப்பற்றியது.
இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 20 ஓவராக குறைக்கப்பட்டது.

இந்தியா ‘ஏ’ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஷிகர் தவான் 36 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 51 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். இதனால் ஜெட் வேகத்தில் ரன் உயர்ந்தது.

சஞ்சு சாம்சன் 48 பந்தில் 6 பவுண்டரி, 7 சிக்சருடன் 91 ரன்கள் குவித்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 19 பந்தில் 36 ரன்கள் சேர்க்க இந்தியா ‘ஏ’ 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.

அடுத்து 20 ஓவரில் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ஹென்ரிக்ஸ் 59 ரன்கள் அடித்தார். 4-வது வீரராக களம் இறங்கிய கைல் வெரெய்னே 44 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க சரியாக 20 ஓவரில் 168 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

இதனால் இந்தியா ‘ஏ’ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் தொடரை 4-1 எனக் கைப்பற்றியது.
Tags:    

Similar News