செய்திகள்
வெற்றி கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா அபார வெற்றி

Published On 2019-09-02 19:27 GMT   |   Update On 2019-09-02 22:09 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அபார பெற்றி பெற்றது.
கிங்ஸ்டன்:

இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடைபெற்றது.  இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்தது. விகாரி 111 ரன்னும், கேப்டன் விராட்கோலி 76 ரன்னும் எடுத்தனர். ஹோல்டர் 5 விக்கெட்டும், கார்ன்வால் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன் எடுத்து திணறிய நிலையில் இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி மேலும் 30 ரன் எடுப்பதற்குள் எஞ்சிய 3 விக்கெட்டை இழந்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 47.1 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது.

ஹெட்மயர் அதிகபட்சமாக 34 ரன் எடுத்தார். பும்ரா ஹாட்ரிக் சாதனையுடன் 27 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். முகமது ‌ஷமிக்கு 2 விக்கெட்டும், ஜடேஜாவுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தன.

299 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது.

57 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து இந்தியா திணறியது. அகர்வால் 4 ரன்னிலும், ராகுல் 6 ரன்னிலும், விராட்கோலி ரன் எதுவும் எடுக்காமலும் ரோச் பந்தில் வெளியேறினார்கள். புஜாரா 27 ரன்னில் ஹோல்டர் பந்தில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டான ரகானே - விகாரி ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. விகாரி 67 பந்தில் 8 பவுண்டரியுடன் 50 ரன்னையும், ரகானே 91 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னையும் தொட்டனர்.

ரகானே 19-வது அரை சதத்தையும், விகாரி 3-வது அரை சதத்தையும் பதிவு செய்தனர்.

இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்து இருந்த போது ஆட்டத்தை ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் வெஸ்ட்இண்டீசுக்கு 468 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ரகானே 109 பந்தில் 64 ரன்னும், (8 பவுண்டரி, 1 சிக்சர்), விகாரி 76 பந்தில் 53 ரன்னும் (8பவுண்டரி) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கேமர் ரோச் 3 விக்கெட்டும் ஹோல்டர் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.



இதைத்தொடர்ந்து 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேம்ப்பெல் 16 ரன்னிலும், பிராத்வெய்ட் 3 ரன்னிலும் அவுட் ஆனார்கள். டேரன் பிராவோ 18 ரன்களுடனும், ஷமார் புரூக்ஸ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 423 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. அதில் களம் இறங்கிய டேரன் பிராவோ, புரூக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை எடுத்தனர்.  இந்த ஜோடியில் டேரன் பிராவோ 23 ரன்னில் இருக்கையில் காயம் காரணமாக வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய புரூக்ஸ் அரை சதத்தை கடந்த நிலையில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து இந்திய அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில் வெஸ்ட் இண்டிஸ் அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியின் சார்பில் முகமது சமி, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

ஆட்ட நாயகனாக தனது ‘கன்னி’ சதத்தை பதிவு செய்த ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிபெற்ற கேப்டனான தோனியின் (27 வெற்றி) முந்தைய சாதனையை, கோலி (28 வெற்றி) முந்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தரவரிசை புள்ளி பட்டியலில் 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் நியூசிலாந்து (60), இலங்கை (60), ஆஸ்திரேலியா (32), இங்கிலாந்து (32) அணிகள் உள்ளன.
Tags:    

Similar News