செய்திகள்
பிவி சிந்து

பிவி சிந்துவுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு - மோடியுடன் சந்திப்பு

Published On 2019-08-27 07:03 GMT   |   Update On 2019-08-27 07:03 GMT
உலக பேட்மிண்டனில் தங்கம் வென்று முத்திரை பதித்த பி.வி.சிந்து இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
புதுடெல்லி:

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள பர்செல் நகரில் நடந்தது.

இதில் பங்கேற்ற இந்தியாவின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர் ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவை வீழ்த்தினார். 2 முறை இறுதிப்போட்டியில் தோற்ற அவர் இந்த முறை தங்கம் வென்று முத்திரை பதித்தார்.

நாட்டுக்கு பெருமை சேர்த்த அவருக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்த வண்ணமாய் இருக்கிறது.

இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர வைத்து பெருமை சேர்த்த பி.வி.சிந்து நேற்று இரவு டெல்லி திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரசிகர்கள், நிர்வாகிகள் திரண்டு வந்து பி.வி.சிந்துவை வரவேற்றனர். உற்சாக வரவேற்புக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றது எனது வாழ்நாளில் சிறந்த தருணமாகும். இந்தியன் என்பதில் நான் உண்மையிலேயே மிகவும் பெருமை அடைகிறேன்.

மேலும் பதக்கங்களை வெல்ல எனக்கு வாழ்த்துக்கள் குவிகிறது. இதற்காக அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலக பேட்மிண்டனில் தங்கம் வென்று முத்திரை பதித்த பி.வி.சிந்து இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
Tags:    

Similar News