செய்திகள்
கொழும்பு டெஸ்ட்: 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 196-4
கொழும்பு டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.
கொழும்பு:
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2-வது டெஸ்ட் கொழும்பில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி 36.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது மழை மீண்டும் குறுக்கிட்டதால்
ஆட்டம் மீண்டும் கைவிடப்பட்டது. அப்போது இலங்கை அணி 66 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், போட்டியின் 3-வது நாளான இன்று இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தனஞ்செயா டி சில்வா சதமடித்தார். அவர் 109 ரன்னில் அவுட்டானார்.
நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதி 4 விக்கெட்டுகளையும், டிரண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால், தொடக்க வீரர் டாம் லாதம் சிறப்பாக விளையாடிய சதம் விளாசி 111 ரன்களுடன் களத்தில் உள்ளார். இறுதியில் மூன்றாம் நாள் ஆட்ட நேரமுடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இலங்கை அணியை விட இன்னும் 48 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து உள்ளது.
மூன்று நாட்கள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில் முதல் இன்னிங்சே முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த போட்டி டிராவில் முடியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.