செய்திகள்
ஆண்டிகுவா டெஸ்ட்: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்
முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஆண்டிகுவா டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாட உள்ளனர்.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் ஆண்டிகுவாவில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்கள் எடுத்தது. இதையடுத்து நேற்று இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது.
இதற்கிடையே, முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஜெட்லி, 1999 முதல் 2013 வரை டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக பணியாற்றியுள்ளார். மேலும், 2009 இந்திய கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் சங்க துணைத்தலைவராக செயல்பட்ட அருண் ஜெட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஆண்டிகுவாவில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.