செய்திகள்
மேரி கோம்

பெண்கள் உலக கோப்பை குத்துச்சண்டை - இந்திய அணிக்கு மேரிகோம் தேர்வு

Published On 2019-08-08 05:02 GMT   |   Update On 2019-08-08 05:02 GMT
ரஷியாவில் நடைபெற உள்ள பெண்கள் உலக கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் மேரிகோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

பெண்கள் உலக கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் அக்டோபர் 3-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் 6 முறை உலக சாம்பியனான 36 வயது மேரிகோம் (51 கிலோ), உலக மற்றும் ஆசிய போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற லவ்லினா (69 கிலோ) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 

இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத ஐதராபாத்தை சேர்ந்த 23 வயது நிகாத் ஜரீன், போட்டி நடத்தப்படாமல் அணியை அறிவித்ததற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் ‘நான் போட்டியில் பங்கேற்க முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறேன். இன்று (நேற்று) எனக்கு தகுதி சுற்று போட்டி நடத்தப்படும் என்று அறிவித்து இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தேர்வு குழு தலைவர் ராஜேஷ் பண்டாரி தெரிவித்து இருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய குத்துச்சண்டை சம்மேளன தேர்வு குழு தலைவர் ராஜேஷ் பண்டாரி கருத்து தெரிவிக்கையில், ‘இந்த ஆண்டில் நடந்த இந்திய ஓபன் மற்றும் சமீபத்தில் நடந்த இந்தோனேஷியா ஓபன் போட்டியில் மேரிகோம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்திய ஓபன் அரையிறுதியில் மேரிகோம், நிகாத் ஜரீனை வீழ்த்தினார். இந்திய குத்துச்சண்டை சம்மேளன நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தகுதியின் அடிப்படையில் தான் மேரிகோம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிகாத் ஜரீன் சிறந்த வீராங்கனை தான். அவருக்கு வருங்காலத்தில் வாய்ப்பு வரும். தற்போது தகுதியின் அடிப்படையில் மேரிகோம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்’ என்றார்.
Tags:    

Similar News