செய்திகள்
ஸ்டீவ் ஸ்மித்

18 மாதங்களாக நான் இழந்த இடத்தை மீண்டும் பெற்றுள்ளேன்.. -ஸ்மித் நெகிழ்ச்சி

Published On 2019-08-06 07:13 GMT   |   Update On 2019-08-06 07:13 GMT
பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இதில் ஆட்டநாயகனாக தேர்வான ஸ்டீவ் ஸ்மித், தனது கருத்தினை கூறியுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஸ்மித்தின் (144) அபார சதத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 284 ரன்கள் சேர்த்தது.

இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 13 ரனகள் எடுத்திருந்தது. நேற்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது.

இதில், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் (6), பேட் கம்மின்ஸ் (4) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 146 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



இது குறித்து ஆட்டநாயகனாக தேர்வான ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், ‘மீண்டும் ஆஷஸ் தொடரில் வென்றது சிறப்பான ஒன்று. இங்கிலாந்தில் விளையாடுவது பிடித்துள்ளது. இந்த சூழலே அற்புதமாக உள்ளது.

எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஆரம்பமே வெற்றி என்பது ஊக்கமளிக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் விளையாடியது மற்றும் என் முக்கிய பங்கினை அளித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணிக்காக முதல் சதத்தை அடிக்கும்போது எப்படி உணர்ந்தேனோ, அப்படித்தான் இப்போதும் உணர்கிறேன். நண்பர்கள், குடும்பத்தினர் அளித்த ஊக்கத்தினாலேயே 18 மாதங்களாக நான் இழந்த இடத்தை மீண்டும் பெற்றுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags:    

Similar News